நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு - அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சேலம் கந்தம்பட்டியில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு - அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Published on

சேலம்,

சேலம் சிவதாபுரம் அருகே கோனேரி ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதை தடங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெகநாதன், மேற்கு தாசில்தார் தீபசித்ரா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சேலம் சிவதாபுரம் மெயின்ரோட்டில் உள்ள கோனேரி ஏரிக்கு செல்லும் நீர் வழிப்பாதை பகுதிக்கு வந்தனர். அப்போது, பொக்லைன் எந்திரம் மூலம் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், அவர்கள் மழைக்காலம் என்பதால் பெரும் சேதம் ஏற்படுவதை தவிர்க்கவே நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் தெரிவித்தனர்.

அதற்கு பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். திடீரென வீடுகளை காலி செய்ய சொன்னால் எப்படி? என்று பொதுமக்கள் கூறினர். ஏற்கனவே, எங்களுக்கு மாற்று இடம் அல்லது வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பம் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிலர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து 2 அல்லது 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் காலஅவகாசம் தருவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com