கொரோனா தடுப்பூசி போட குவிந்த மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் குவிந்தனர்.
கொரோனா தடுப்பூசி போட குவிந்த மக்கள்
Published on

திண்டுக்கல் :

கொரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்காக அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி சிறப்பு மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் 3 நாட்களாக தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமுடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 10 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்தன.

மக்கள் குவிந்தனர்

இதை தொடர்ந்து நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

அதன்படி அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதன்மூலம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 60 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

அதை அறிந்ததும் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

இதனால் அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இதேபோல் நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் நேற்று சிறுகுடி மற்றும் செந்துறை ஊராட்சிகளில் சிறப்பு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் செந்துறை மற்றும் சிறுகுடி பகுதிகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நத்தம் பகுதியில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது வட்டார மருத்துவ அலுவலர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com