கவர்னரின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துள்ளனர் அமைச்சர் கந்தசாமி பேச்சு

திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் கவர்னரின் இரட்டைவேடத்தை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி உள்ளனர் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
கவர்னரின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துள்ளனர் அமைச்சர் கந்தசாமி பேச்சு
Published on

வில்லியனூர்,

புதுவை மாநிலம் ஏம்பலம் தொகுதி கோர்க்காட்டில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி, இசை கலைஞர்களுக்கு தவில், நாதஸ்வரம் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ரூ.200 கோடி நஷ்டத்தில் உள்ளது. இதனை பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதனும், கவர்னரும் அரசே நடத்தவேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் அதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து சாமிநாதன் பெற்றுத்தருவாரா?

மக்கள் நலத்திட்டங்கள் எதையுமே செய்யவிடாமல் எங்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து அந்த கட்டுகளை அவிழ்க்க முயற்சித்து வருகிறோம். விரைவில் கட்டுகள் தளர்த்தப்பட்டு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

காமராஜர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை ஆதிதிராவிடர்களுக்கு ரூ.5 லட்சமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 4 லட்சமாகவும் உயர்த்த நமது அரசு முடிவு செய்தது. ஆனால் அதற்கு கவர்னர், மத்திய அரசு வழங்கும் ரூ.1 லட்சத்தை வழங்க முடியாது என்று கூறுகிறார். இதேபோல் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திலும் முட்டுக்கட்டை போடும் கவர்னர், மாநில நலனுக்காக பாடுபடுகிறேன் என்று கூறுகிறார். அவரது இரட்டைவேடத்தை தற்போது மக்களே உணர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் நீல.கங்காதரன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ரகுபதி, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன், குமரேசன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com