இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பும் மக்கள்: விழுப்புரத்தில் மீண்டும் இயங்க தொடங்கிய போக்குவரத்து சிக்னல்கள்

விழுப்புரத்தில் இயல்பு நிலைக்கு மக்கள் மெல்ல திரும்பி வரும் நிலையில், நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.
இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பும் மக்கள்: விழுப்புரத்தில் மீண்டும் இயங்க தொடங்கிய போக்குவரத்து சிக்னல்கள்
Published on

விழுப்புரம்,

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. 3-ம் கட்ட ஊரடங்கான தற்போதைய சூழலில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு அறிவித்த தளர்வின் படி கடைகளை திறக்கும் நடவடிக்கை என்பது படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள்.

கடந்த 52 நாட்களுக்கு பிறகு மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகள் திறப்பு இதனால் கடைவீதிகள் மற்றும் நகரின் பிரதான சாலைகளின் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதுடன், வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது.

இதனால் ஊரடங்கால் இயங்காமல் கிடந்த சிக்னல்கள் தற்போது விழுப்புரம் நகரில் மீண்டும் இயங்க தொடங்கி இருக்கிறது. அதன்படி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் உள்ள சிக்னல்கள் நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வாகன ஓட்டிகளை அனுப்பினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருக்கும் சிக்னல்களும் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன.

சமூக இடைவெளி

சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்னல்கள் அமைந்துள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு வசதியாக அடையாள குறியீடுகள் போடப்பட்டு அந்த வட்டத்திற்குள் வாகன ஓட்டிகள் நின்று அதன் பிறகே சென்று வரும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரத்தில் உள்ள நான்குமுனை சந்திப்பில் நேற்று வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றிருந்தனர். இதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே விழுப்புரம் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள சிக்னல்கள் அமைந்துள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com