

கரூர்,
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று ராமானுஜம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வழங்கி உள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி நிலைக்குமா? என்று எதிர்க்கட்சியினர் கூறினர். அவர்களுடைய எண்ணத்தை தவிடுபொடியாக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். மீண்டும் தமிழகத்தை எடப்பாடி பழனிசாமி தான் ஆள வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டனர்.
எனவே தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய கரூர் தொகுதி மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கரூரில் ஜவுளி தொழில் மேம்பட விசைத்தறி பூங்கா அமைக்கப்படும். பின்னலாடை தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்படும். ஒருங்கிணைந்த சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்படும்.
மேலும் கரூர் மாவட்ட மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வர உறுதுணையாக இருப்பேன். கூப்பிட்ட நேரத்தில் வந்து மக்களின் துயர் துடைப்பேன். எனவே வருகிற தேர்தலில் எனக்கு ஆதரவு அளித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று மக்களின் பாதம் தொட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.