ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பீட்டர் முகர்ஜி 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை

ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பீட்டர் முகர்ஜி 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பீட்டர் முகர்ஜி 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை
Published on

மும்பை,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

விசாரணையை தொடர்ந்து இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோரையும் மும்பை போலீசார் கைது செய்தனர்.

ஜாமீனில் விடுதலை

பீட்டர் முகர்ஜி மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பீட்டர் முகர்ஜி ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்ய 6 வார கால அவகாசம் வழங்கிய ஐகோர்ட்டு, அதுவரை பீட்டர் முகர்ஜி சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இந்த 6 வாரகால அவகாசம் முடிந்ததை அடுத்து பீட்டர் முகர்ஜி நேற்று ஆர்தர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com