

உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று காலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார்? அவரை யாரேனும் கொலை செய்து தீ வைத்து எரித்து விட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.