சுரண்டை அருகே பரிதாபம்: குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி

சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சுரண்டை அருகே பரிதாபம்: குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி
Published on

சுரண்டை,

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர் வடகரையை அடுத்துள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் மணி. அவருடைய மகன் மாரியப்பன் (வயது 8). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

பள்ளி விடுமுறை நாளான நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ச்சலுக்காக குத்தாலப்பேரி குளம் அருகே ஓட்டிச் சென்றான். ஆடு மேய்ந்து கொண்டிருந்தபோது, குளத்தை பார்த்ததும் அவன் குளிக்க ஆசைப்பட்டான். இதனால் குளத்தில் இறங்கி அவன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

மாலையில் வெகு நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், மணி குளக்கரை பகுதிக்கு தேடிச் சென்றார்.

அங்கு குளத்தில் தனது மகன் பிணமாக மிதந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து, கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றி அறிந்த அவனுடைய தாய் மற்றும் உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவனது உடலை பார்த்து அவர்கள் கதறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சாம்பவர் வடகரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாரியப்பனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com