தங்க புதையல் கிடைத்ததாக வாலிபரை கடத்திய விவகாரம்: நாகர்கோவில் ஆசிரியர் உள்பட 3 பேர் கைது

தங்க புதையல் கிடைத்ததாக வாலிபரை கடத்திய விவகாரத்தில் நாகர்கோவில் பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் திடீரென தலைமறைவாகி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்க புதையல் கிடைத்ததாக வாலிபரை கடத்திய விவகாரம்: நாகர்கோவில் ஆசிரியர் உள்பட 3 பேர் கைது
Published on

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் குட்டி சரல்விளையைச் சேர்ந்தவர் ஜெர்லின்(வயது 24), பொக்லைன் எந்திர டிரைவர். டிரைவராக இருந்த ஜெர்லின் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று 3 சொகுசு கார்கள், 3 பொக்லைன் எந்திரங்கள் வாங்கி தொழில் செய்து வந்தார்.

இதனால், அப்பகுதி மக்களுக்கு ஜெர்லின் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஜெர்லினின் நண்பர் ஒருவர் அவரிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு ஜெர்லின், தனக்கு தங்க புதையல் கிடைத்ததாக கூறினார். இதை மோப்பம் பிடித்த கருங்கல் போலீசார் 2 பேர், ஜெர்லினை கடத்தி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முடிவு செய்தனர்.

வாலிபர் கடத்தல்

அதன்படி போலீஸ்காரர்கள் 2 பேரும் சில ரவுடிகளுடன் சேர்ந்து கடந்த 7-ந்தேதி ஜெர்லினுக்கு மான் கறி ஆசைகாட்டி வள்ளியூருக்கு காரில் கடத்திச் சென்றனர். பின்னர், அங்கு ஒரு வீட்டில் வைத்து தங்க புதையல் குறித்து கேட்டு சித்ரவதை செய்து பத்திரங்களில் கையெழுத்து வாங்கினர்.

பின்னர், அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு 2 கார்களையும் கடத்தி சென்றனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிய ஜெர்லின் இதுபற்றி குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 போலீஸ்காரர்களும் பணிஇடமாற்றம் செய்யப்பட்டனர்.

7 பேர் மீது வழக்கு

தனிப்படையின் விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் போலீஸ்காரர்களுக்கு உதவியது, உதயமார்த்தாண்டம் பூம்பாறவிளையைச் சேர்ந்த ஜகன் என்ற ஜெயராஜன், கப்பியறை வேளாங்கோட்டுவிளையைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற ஜெய ஸ்டாலின், மேக்காமண்டபம் கடமலைக்குன்று பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், புத்தளத்தை சேர்ந்த அண்ணன்- தம்பிகளான ராஜா அருள்சிங், ராஜா அஸ்வின், வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையைச் சேர்ந்த ஜெரின்ராபி, கிருஷ்ணகுமார் ஆகிய 7 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே இதில் பெண் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

3 பேர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பாலாஜிநகர் பகுதியில் பதுங்கி இருந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகுமார், ஜெரின்ராபி ஆகிய 3 பேரை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுரேஷ்குமார் நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. பின்னர், அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண் இஸ்பெக்டர் தலைமறைவு

இதற்கிடையே தனிப்படையினரின் விசாரணை வளையத்துக்குள் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் திடீரென தலைமறைவானார். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெண் இன்ஸ்பெக்டர் பிடிபட்டால் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க புதையல் கிடைத்ததாக வாலிபரை கடத்திய வழக்கில் நாகர்கோவில் பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com