முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

தெங்கம்புதூர் அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையனின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.
முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Published on

மேலகிருஷ்ணன்புதூர்,

தெங்கம்புதூர் அருகே உள்ள மேலகாட்டுவிளையை சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி அருமைலட்சுமி (வயது 60). இவர் சின்னனைந்தான்விளையில் உள்ள சந்தைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட்கள் வாங்கிய பின்பு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒரு நபர் அருமைலட்சுமியின் அருகே வாகனத்தை நிறுத்தி முகவரி கேட்பது போல் வந்தார். அருமை லட்சுமி முகவரி சொல்லி கொண்டிருந்த போது, திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியைஅந்த நபர் பறித்தார். அதிர்ச்சி அடைந்த அருமைலட்சுமி, திருடன்... திருடன்... என அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அருமை லட்சுமியிடம் நகை பறித்த கொள்ளையன், தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியை போலீசார் கைப்பற்றி, தப்பி சென்ற கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com