

பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி உடையார் தெரு விரிவு பகுதியை சேர்ந்தவர் தேவி. தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் பவானி (வயது 17). இவர், பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானது. அதில் மாணவி பவானி, தேர்ச்சி பெற்றார். ஆனால் அவர் குறைந்த மதிப்பெண்களே பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் தேவி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் பவானி மட்டும் தனியாக இருந்தார். வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்த தேவி, வீட்டின் உள்ளே தனது மகள் பவானி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் பவானி எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி பவானி, தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால்தான் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.