பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யலாம்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யலாம்
Published on

புதுக்கோட்டை,

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலை வாய்ப்புத்துறையின் https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த வசதியால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

தற்போது 2018-ம் ஆண்டிற்கான பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நாளை (திங்கட்கிழமை) வழங்கப்பட உள்ளது. இதையொட்டி நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை 15 நாட்கள் ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை வேலை வாய்ப்புத்துறையின் https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் அளவிலேயே ஆன்லைனில் பதிவு செய்யலாம். அல்லது வேலை வாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். எனவே மாணவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. கல்வி தகுதியை பதிவு செய்திருந்தால், அந்த வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி பிளஸ்-2 கல்வி தகுதியினை கூடுதலாக பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவு மேற்கொள்ளலாம். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com