பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில், பிளஸ்-1 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

அனுப்பர்பாளையம்,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 39). இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சபரிகுரு (18). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வில் சபரிகுரு எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைவாகவே பெற்றுள்ளான். இதனால் அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவனுடைய பெற்றோர் அவனிடம் பிளஸ்-2 வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளலாம். இப்போது இருந்தே நன்றாக படி என்று கூறி உள்ளனர். ஆனாலும் அவன் கடந்த 1 மாதமாக கடுமையான மனஉளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சபரிகுருவின் பெற்றோர் ஈரோடு சந்தைக்கு சென்று விட்டனர். வீட்டில் சபரிகுருவும், அவனுடைய தம்பி மட்டும் இருந்துள்ளனர். அப்போது சபரிகுரு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை கண்ட அவனுடைய தம்பி கூச்சல் போட்டுள்ளான். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு சந்தையில் இருந்து அவசர அவசரமாக வீடு திரும்பிய பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது. இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சபரிகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் மதிப்பெண் அதிகமாக எடுக்க முடியாத விரக்தியில் பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com