மின்சாரம் பாய்ந்து பிளஸ்-2 மாணவர் பலி அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தந்தையும் சாவு

சின்னதாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளஸ்-2மாணவர் பலியானார். இதைஅறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அவரது தந்தையும் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் பாய்ந்து பிளஸ்-2 மாணவர் பலி அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தந்தையும் சாவு
Published on

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள சின்னதாராபுரம் குஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 52). இவரது மகன் பாலாஜி (17). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பாலாஜி வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, பாலாஜி தனது வீட்டில் உள்ள ஸ்பீக்கர், ரேடியோ செட்டை கழற்றி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து பாலாஜியை அவரது தந்தை செல்லமுத்து மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தங்களது காரில் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலாஜியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்லமுத்து மருத்துவமனையில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குடும்பத்தினர் கதறல்

இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்லமுத்து-பாலாஜி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்தசம்பவம் குறித்து செல்லமுத்துவின் மனைவி சித்ரா சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னதாராபுரம் அருகே அருகே தந்தையும், மகனும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com