திருமுல்லைவாயலில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருமுல்லைவாயலில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
Published on

ஆவடி,

திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 20-ந் தேதி பள்ளி சென்ற மாணவி, மாயமானார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவி, கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, படித்து வந்தார். அப்போது கும்மிடிப்பூண்டியை அடுத்த கொண்டம்மநல்லூர் எடூர் பகுதியை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் (வயது 23) என்பவர் மாணவியை ஆசைவார்த்தைகள் கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவியை அவரது பாட்டி, திருமுல்லைவாயலில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டார். தற்போது அந்த வாலிபருடன் மாணவி இருப்பதை கண்ட பெற்றோர், அவரை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இதற்கிடையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி, 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெய்கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல் மணலி அரிகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் (21). எலக்ட்ரீசியனான இவர், தனது வீட்டில் யாரும் இல்லாத போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுமியை பேச வரும்படி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீட்டரை, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com