போலீஸ் நிலையத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

பெண் கலப்பு திருமணம் செய்த விவகாரம் தொடர்பாக நரிக்குறவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Published on

போளூர்,

செங்கம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 21). பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் போளூர் அல்லியந்தல் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடைய மகள் சங்கவி (19) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். சங்கவி நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறிய சங்கவி 13-ந் தேதி தமிழ்செல்வனுடன் மேல்மருவத்தூரில் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் சங்கவியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி காதல் ஜோடியான தமிழ்செல்வனும், சங்கவியும் போளூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் மேஜர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்துவதற்காக திருவண்ணாமலையில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு அழைத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சங்கவியின் உறவினர்கள் குடியிருப்புக்கு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் காதல் ஜோடியை போளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் போளூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவலறிந்த சங்கவியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், சங்கவியின் உறவினர்களான நரிக்குறவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டினர்.

தமிழ்செல்வனுடன் தான் வாழ்வேன் என்று சங்கவி உறுதியாக கூறினார். எனவே அவர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு சங்கவியை, தமிழ்செல்வனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com