சைபர், பொருளாதார, போதைப்பொருள் குற்றங்களை தடுக்கும் போலீஸ் நிலையங்களை மேலும் பலப்படுத்த வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு

சைபர், பொருளாதார, போதைப்பொருள் குற்றங்களை தடுக்கும் போலீஸ் நிலையங்களை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
சைபர், பொருளாதார, போதைப்பொருள் குற்றங்களை தடுக்கும் போலீஸ் நிலையங்களை மேலும் பலப்படுத்த வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
Published on

பெங்களூரு,

போலீஸ் துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மாநில டி.ஜி.பி. பிரவீன்சூட் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

கொரோனா ஊரடங்கு காலத்தில் போலீசார் சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளனர். இதற்காக போலீசாரை நான் பாராட்டுகிறேன். கர்நாடகத்தில் சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களை மேலும் பலப்படுத்த அரசு உதவி செய்ய தயாராக உள்ளது. இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குற்றங்களில் தவறு செய்தவர்களை கண்டுபிடிக்க வசதியாக தடய அறிவியல் சோதனை கூடத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம். போலீஸ் துறைக்கு தேவையான வாகனங்களை வாங்க நிதி ஒதுக்கப்படும். 3,000 ஊர்க்காவல் படையினரை நீக்க திட்டமிடப்பட்டது. அவர்களை நீக்க வேண்டாம். அவர்களின் சேவையை வெவ்வேறு பிரிவுகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரும் நாட்களில் தனியார் நிறுவனங்களுக்கு ஊர்க்காவல் படையினரின் சேவையை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்குகிறது. மழை பாதிப்புகளின்போது மீட்பு பணிகளை மேற்கொள்ள இயற்கை பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 200 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் 200 பேரும் 4 குழுக்களாக பிரித்து, 4 மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். போலீஸ் துறையின் கீழ் வரும் பல்வேறு துறைகள் தொடர்பான கட்டமைப்பு பணிகள் குறித்து திட்ட அறிக்கை வழங்கினால் அதற்கு ஒப்புதல் வழங்கப்படும். வங்கிகளில் அரசின் நிதியை டெபாசிட் செய்யும்போது, முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் மந்திரி பசவராஜ் பொம்மை பேசுகையில், கொரோனா வைரஸ் சிறையில் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறைகளில் இதுவரை ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 5,005 கைதிகள் ஜாமீன் மற்றும் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளின் நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், போலீஸ் துறை முதன்மை செயலாளர் ரஜனீஸ் கோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com