

சென்னை,
பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியாக மட்டுமின்றி பொழுதுபோக்கு தளமாகவும் திகழ்கிறது. விடுமுறை தினங்களில் பூண்டி ஏரியை சுற்றிப்பார்க்க பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர். ஏராளமான காதல் ஜோடிகளையும் காண முடிகிறது. பூண்டி ஏரியின் கரையோரம் மரங்கள், செடிகள் அடர்ந்து புதர் போன்று காட்சியளிக்கின்றன. அங்கு 200-க்கும் அதிகமாக குரங்குகள் உள்ளன. கூட்டமாக ஏரி அமைந்துள்ள சாலையில் அவை ஒய்யாரமாகவே வலம் வருகின்றன.
மக்கள் திண்பண்டங்கள், உணவு பொட்டலங்களை கையில் எடுத்து சென்றால், குரங்குகள் பாய்ந்து வந்து பிடுங்கி சென்று விடுகின்றன. பொருட்களை தராமல் மல்லுக்கட்டுபவர்களை குரங்குகள் நகத்தால் கீறியும் விடுகின்றன. குரங்குகள் அட்டகாசத்தால் பூண்டி ஏரியை சுற்றிப்பார்க்க வருவோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே குரங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.