பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள்: லாரிகளில் வந்து சேர்ந்தன

பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான விலையில்லா வேட்டி- சேலைகள் லாரிகளில் திருச்சிக்கு வந்து சேர்ந்தன.
பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள்: லாரிகளில் வந்து சேர்ந்தன
Published on

திருச்சி,

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விலையில்லா வேட்டி-சேலை வழங்குவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து எல்லா மாவட்டங்களுக்கும் வேட்டி-சேலைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேட்டி-சேலைகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்து உள்ளன. திருச்சி மேற்கு தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலைகள் நேற்று காலை வந்தன. வேட்டி-சேலை மூட்டைகளை லாரியில் இருந்து இறக்கிய தொழிலாளர்கள் அதனை தனி அறைக்கு கொண்டு சென்று அடுக்கி வைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் சுமார் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவற்றில் அரிசி பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் பச்சரிசி, முந்திரி பருப்பு, சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி முதல் வாரம் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com