

ஈரோடு,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர், ஊராட்சி எழுத்தர் உள்ளிடோருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். 21 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டு உள்ள நிலுவை தொகை, அகவிலைப்படி நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். அனைத்து வகையான ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி 9 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான சிகிச்சைகளுக்குமான செலவு தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு பேசினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், இணைச்செயலாளர் ஹரிதாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.