முகிலன் மீதான பாலியல் வழக்கு 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கரூருக்கு முகிலன் அழைத்து வரப்பட்டார். பின்னர் அந்த கோர்ட்டில் நீதிபதி விஜய்கார்த்திக் முன்பு ஆஜரானார்.
முகிலன் மீதான பாலியல் வழக்கு 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

கரூர்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முகிலன். இவர், மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணை கரூர் ஜூடிசியல் மாஜிஸ் திரேட் எண் 1-ல் நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆஜராவதற்காக திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கரூருக்கு முகிலன் அழைத்து வரப்பட்டார். பின்னர் அந்த கோர்ட்டில் நீதிபதி விஜய்கார்த்திக் முன்பு ஆஜரானார். அப்போது வழக்கினை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதே போல், வாங்கலில் நடந்த கூட்டத்தின் போது ஒருவரை முகிலன் தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும் அதே கோர்ட்டில் முகிலன் ஆஜரானார். அந்த வழக்கினை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வேனில் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு முகிலனை போலீசார் அழைத்து சென்றனர்.

முன்னதாக, கோர்ட்டில் நிருபர்களிடம் முகிலன் கூறுகையில், தமிழகத்தில் மணற்கொள்ளையின் மூலம் பணம் சம்பாதித்தவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி ஊழலை அரங்கேற்றி வருகிறார்கள். அப்படி செய்த ஒருவர் தான், தற்போது பிரதான கோவிலின் தேவஸ்தான தலைவராகியுள்ளார். கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கக்கூடிய வகையில் மணல் அள்ள அனுமதி தந்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com