

திருப்பூர்,
திருப்பூரில் உள்ள புகழ்பெற்ற வீரராகவபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 29-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் நுழைவுவாயில் வழியே உள்ளே சென்று வீரராகவபெருமாளை தரிசனம் செய்து விட்டு சொர்க்கவாசல் வழியே வெளியே வருவார்கள்.
அப்போது சொர்க்கவாசல் அருகே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இதற்காக திருப்பூர் ஸ்ரீ வாரிடிரஸ்ட் சார்பில் திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து திருப்பூர் ஸ்ரீ வாரிடிரஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது:-
வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி எங்கள் டிரஸ்டின் பக்தர்கள் குழு சார்பில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கி வருகிறோம். அதே போல இந்த ஆண்டு 1 லட்சத்து 18 ஆயிரம் லட்டுகள் தயாரித்து வருகிறோம். இந்த லட்டுகள் தயாரிக்க 1,500 கிலோ கடலைமாவு, 3,000 கிலோ சர்க்கரை, 1,500 கிலோ எண்ணெய், 75 கிலோ நெய், 50 கிலோ திராட்சை, 50 கிலோ முந்திரி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. லட்டுகள் தயாரிக்கும் பணியில் 75 சமையல் கலைஞர்கள், 500 பெண்கள் ஈடுபட்டனர் இன்று (நேற்று) காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த பணி இரவு 9 மணிக்கு முடிவடைந்தது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.