இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தின விழாவையொட்டி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்
Published on

புதுச்சேரி,

புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அரசு சார்பில் வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை கவர்னர் கிரண்பெடி ஏற்றிவைக்கிறார். அதன்பின் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு விருதுகளையும், சாதனை புரிந்த பள்ளிகளுக்கு சுழற்கேடயங்களையும் அவர் வழங்குகிறார்.

தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

விழா நடக்கும் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் போலீசார், தேசிய மாணவர் படை மாணவர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் முழுவீச்சில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மைதானத்தில் விழா மேடை, பந்தம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

விழா நடைபெறும் இடம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி புதுவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ரெயில் நிலையம், பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில எல்லைகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com