தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் தயாரித்த கிருமி நாசினி எந்திரம் - கலெக்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்டது

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் தயாரித்த கிருமி நாசினி எந்திரம் கலெக்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்டது.
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் தயாரித்த கிருமி நாசினி எந்திரம் - கலெக்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்டது
Published on

தேனி,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், கிருமி நாசினி திரவத்தால் (சானிடைசர்) கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் மக்களுக்கு சானிடைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில் சானிடைசர் வழங்கும் எந்திரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரம் மனிதர்கள் நின்று கொண்டே பிற நபர்கள் உதவியின்றி பாதுகாப்பான முறையில் சானிடைசர் திரவத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எந்திரத்தின் அடிப்பகுதியை கால்களால் அழுத்தினால், மேல் பகுதியில் சானிடைசர் வைக்கப்பட்டு இருக்கும் பாட்டிலில் இருந்து சிறிய குழாய் வழியாக சானிடைசர் வெளியே வருகிறது.

எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எந்திரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பயன்பாட்டுக்காக அரசு தொழிற்பயிற்சி நிலைய அதிகாரிகள் நேற்று வழங்கினர். பின்னர் அந்த எந்திரத்தை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அங்கு வந்து செல்லும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுவ கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com