விருத்தாசலத்தில் சிறை கைதி சாவு: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல் - பண்ருட்டி அருகே பரபரப்பு

விருத்தாசலத்தில் சிறை கைதி உயிரிழந்த விவகாரத்தில், போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்தார் என்று கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலத்தில் சிறை கைதி சாவு: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல் - பண்ருட்டி அருகே பரபரப்பு
Published on

பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). இவர் முந்திரி தொழில் செய்து வந்தார். இதற்காக நெய்வேலி வடக்குத்தில் தனது மனைவி பிரேமா (34) மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்தும் வந்தனர். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் செல்வமுருனை கைது செய்தனர். பின்னர் நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வமுருகன் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு உடல் நிலை பாதிக்கப்பட்டு, செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் செல்வமுருகன் உயிரிழந்துள்ளார் என்று கூறி, அவரது உறவினர்கள் நேற்று காலை காடாம்புலியூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, செல்வ முருகனை தாக்கிய நெய்வேலி போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மற்றும் தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை முடிவு கிடைத்ததும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com