தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

செங்கல்பட்டு அருகே தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
Published on

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(வயது 30). இவர், நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்றார். செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த தனியார் பஸ், எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாண்டியன் தலையில் தனியார் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் அவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் விருதுவிளங்கினான் ஊரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(29). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், தனது நண்பரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மலையரசன் குப்பத்தைச் சேர்ந்த வைகோ(22) என்பவருடன் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செய்யூரை அடுத்த ஓதியூர் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் கார்த்திகேயன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் வைகோ படுகாயம் அடைந்து, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். செய்யூர் போலீசார், பலியான கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான பண்ருட்டியை பழனி(45) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com