கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமலூர் ஊராட்சிக்கு உட்பட்டது தாத்தையன்கண்டிகை கிராமம். இங்கு சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீருக்கான ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டும், அதில் இருந்து முறையான குழாய் இணைப்பு கொடுக்கப்பட வில்லை என்றும் கிராம மக்களுக்கு தினமும் தண்ணீர் கிடைக்கிறதா? இல்லையா? என்பதை கூட ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்வது இல்லை என்றும் கூறப்படுகிறது.

குடிநீர் பற்றாக்குறை காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தினமும் 2 கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தனியாருக்கு சொந்தமான மாந்தோட்டம் ஒன்றில் குடிநீர் பிடித்து வருகின்றனர்.

அதேபோல கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ளது எளாவூர் காலனியில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று சுண்ணாம்புகுளம் கிராமத்தில் குடிநீர் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கண்ட 2 கிராமங்களை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்திட ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் நேற்று தனித்தனியாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், ராம்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை போக்க தக்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும், அது வரை மாற்று ஏற்பாடாக வாகனம் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com