குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

லாலாபேட்டை,

பழையஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 30 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த தொட்டியப்பட்டி பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டு குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தொட்டியப்பட்டி பகுதியில் விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com