குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் வண்ணாரப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
Published on

ராயபுரம்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர், லாரி மூலம் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப் படுகிறது.

இதனால் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். லாரிகள் மூலம் தண்ணீர் வந்தால் 2 அல்லது 3 குடங்களில் மட்டுமே தண்ணீர் பிடிக்க முடிகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் வீதி, வீதியாக குடங்களை சுமந்து சென்று தண்ணீருக்காக அலைகிறார்கள்.

வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு பகுதியில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கிறார்கள். தற்போது ரம்ஜான் நோன்பு இருப்பதினால் வீடுகளில் தண்ணீர் அதிகம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இந்தநிலையில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை பழைய வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை போலீசார், தண்ணீர் லாரிகள் மூலமாக முறையாக தண்ணீர் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com