

கொரோனா தாக்கம்
புதுவையில் தொற்று நோய் பரவலாக இருந்து வருகிறது. இருப்பினும் கொரோனாவை தடுக்க அரசு மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கிய நிலையில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான சேவைகளையும் தடை விதித்துள்ளது.
அபராதம்
இந்தநிலையில் புதுவையில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க அரசு மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தபோதும் கிராமப் புறங்களில் நோய் குறைந்து விட்டது என கருதி அலட்சியமாக முககவசம் அணியாமல் சுற்றிவருகின்றனர். பலமுறை எச்சரித்தும் பாகூர் பகுதியில் பலர் முக கவசம் அணிவதில்லை.
இதனால் பாகூர் மார்க்கெட் வீதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் முக கவசம் அணியாதவர்களுக்கு நேற்று அபராதம் விதித்தனர். கடைவீதிகளில் கண்டிப்பாக முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
தீவிர கண்காணிப்பு
பண்டிகை காலம் நெருங்குவதால் பொதுமக்கள் கடைகளில் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் மார்க்கெட் வீதியில் உள்ள கடை உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கடைகளுக்கு முன்பு சானிடைசர் வைக்க வேண்டும். கடைகளில் வேலை செய்யும் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பேருந்துகளில் வரும் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
வெளிநாடுகளில் தொற்று தற்போது தீவிரமடைந்துள்ளதால் புதுவையில் தொற்றை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளுடன் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.