ரெயில்வேக்கு சொந்தமான பாதையை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கோவில்பட்டியில் ரெயில்வேக்கு சொந்தமான பாதையை மூடுவ தற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
ரெயில்வேக்கு சொந்தமான பாதையை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
Published on

கோவில்பட்டி,

மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கான முதற் கட்ட பணிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியிலும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங் கப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி நகரில் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் பொதுமக்கள், பாதையாக பயன்படுத்தப்பட்டு வரும் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களை மூடும் பணியினை தொடங்கி உள்ளது. அதன்படி கோவில்பட்டி திலகர் நகர் பகுதியில் இருந்து காந்தி நகருக்கு செல்லும் பாதையை மூடுவதற்கு கேட் அமைக்கும் பணிகளில் நேற்று முன்தினம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். காலம் காலமாக பயன்படுத்தி வரும் பாதையை அடைத்தால் மக்கள் வெகுதூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்படும். இந்த பாதை வழியாக ஆஸ்பத்திரி, பஸ் நிலையம் உள்ளிட்ட மிக முக்கிய இடங்களுக்கு தற்போது எளிதில் சென்று வருவதாகவும், இந்த பாதை அடைக்கப்பட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்று கூறி, அந்த பகுதி மக்கள் ரெயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். மேலும் கேட் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com