கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், சீனிவாச நகர், அத்தைகொண்டான், செண்பகவல்லிநகர், நகராட்சிக்கு உட்பட்ட திலகர் நகர், காந்தி நகர் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்புராயலு தலைமையில் காவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் காரிக்க மனு வழங்கினார்கள். அதில் இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், சீனிவாச நகர், அத்தைகொண்டான், செண்பகவல்லி நகர் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் நகர், காந்தி நகர் பகுதியில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது கடம்பூர் முதல் கோவில்பட்டி இடையிலான 2-வது ரயில்வே இருப்பு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் நகருக்குள் வரமுடியாத வண்ணம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனமும் வர முடியாத நிலை உள்ளது.

எனவே, கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை ரெயில்வே சுரங்கப்பாதை வரை இருப்பு பாதைக்கு இணையாக அணுகு சாலை அமைக்க வேண்டும்.

மேலும், ராமசாமி தாஸ் பூங்கா எதிர்புறம் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள சாலையிலும், தட்சிணாமூர்த்தி கோவில் தெருவின் கடைசியிலும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com