ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி

ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கியது. ஆனால் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். எனவே கூடுதல் வாகனங்கள் மூலம் விற்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி
Published on

கோவை

ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கியது. ஆனால் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். எனவே கூடுதல் வாகனங்கள் மூலம் விற்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வாகனங்கள் மூலம் காய்கறிகள்

தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகை கடைகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மூடப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் 1,600 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி காய்கறிகள் கிடைக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தள்ளு வண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

மளிகை பொருட்கள் விற்பனை

இதன்படி கோவை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய 60 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 5 லட்சம் வீடுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் குறைந்த அளவிலான கடைகளே ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்தன.

இதனால் ஒரே நேரத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் மளிகை பொருட்கள் வேண்டி போனில் அழைத்தனர். அவர்களுக்கு வரிசைப்படி கடை ஊழியர்கள் மளிகை பொருட்களை தயார் செய்து வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் வீடு, வீடாக விற்பனை செய்தனர்.

கடும் தட்டுப்பாடு

தள்ளு வண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் போதுமான வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை.

இதனால் மளிகை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி சிலர் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

உரிய நடவடிக்கை

கோவை மாநகராட்சி பகுதியில் 18 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். மளிகை பொருட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடிகிறது. தள்ளு வண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை நடைபெற வில்லை.

இதனை பயன்படுத்தி பருப்பு, மசாலா, எண்ணெய், சோப்பு உள்பட அடிப்படை தேவையான பொருட்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் வாகனங்களில் மளிகை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com