அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
Published on

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டு பாட்டையப்பாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாக்கடை கால்வாய், சாலை, பாதாள சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல குழு உறுப்பினர் நடராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று காலை அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அலுவலக வாசலின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து 1-வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 14-வது வார்டு பாட்டையப்பாநகரில் உடனடியாக சாக்கடை கால்வாய் மற்றும் தார்சாலை அமைக்க வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்ட பகுதியை இணைக்க வேண்டும். தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். விநாயகப்பாநகர் ஐஸ்வர்யா கேட், கே.ஆர்.சி. கீர்த்தனா ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும். பிரம்மதேவன் கோவிலில் இருந்து காவிலிபாளையம் வரை தார்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் உதவி கமிஷனர் வாசுக்குமாரிடம் வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அவர் குடிநீர் குழாயில் கசிவு பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்படும் என்றும், பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடைந்த பின்னர் உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதன் பின்னரே பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக மண்டல அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com