

புதுச்சேரி,
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 9-வது ஆண்டு தொடக்கவிழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது. வர உள்ள தேர்தல்களிலும் எங்கள் கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும், வளர்ச்சி அடையவும் காரணமாக இருந்த அனைத்து மக்களுக்கும், பிறமாநில மக்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுவை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதை அனைவரும் அறிவார் கள். எங்கள் ஆட்சியில் நெசவாளர், ஊனமுற்றோருக்கான திட்டங்கள், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு என பல திட்டங்களை கொண்டு வந்தோம். இதனால் புதுவை வளர்ச்சி அடைந்தது. இவ்வாறு ரங்கசாமி கூறினார்.
அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா?
பதில்: கடந்த தேர்தலைப்போலவே இந்த தேர்தலிலும் போட்டியிடுவோம். கூட்டணி கட்சிகள், மக்கள் ஆதரவோடு வெற்றிபெறுவோம்.
கேள்வி: உங்கள் வேட்பாளர் யார்?
பதில்: தக்க நேரத்தில் அதை வெளியிடுவோம்.
கேள்வி: கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கிறதா?
பதில்: தேர்தல் என்றால் கூட்டணி பேச்சுவார்த்தை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேசிக்கொண்டுதான் உள்ளோம்.
பதில்: கவர்னருக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது நாராயணசாமி தெரிவித்தார். கவர்னருக்கான அதிகாரம் குறித்து அவருக்கு நன்றாக தெரியும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் வந்துள்ளது. ஆனால் போட்டி போட்டுக்கொண்டு கவர்னரை குறை கூறி வருகிறார். எந்த பணிகளையும் செய்யவில்லை. புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களையும் நீக்கம் செய்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கவர்னரை குறைகூறி காலத்தை கழிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை. பொதுப்பணித்துறை மூலம் எங்காவது பணிகள் நடக்கிறதா? மழைக்குப்பின் எந்த சாலையும் போடப்படவில்லை. நாங்கள் கொண்டுவந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.