தூய்மை பாரத இயக்கம் குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், கலெக்டர் அறிவுறுத்தல்

தூய்மை பாரத இயக்கம் குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.
தூய்மை பாரத இயக்கம் குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

விருதுநகர்,

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தாத மாவட்டமாக மாற்றுவது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியபோது தெரிவித்ததாவது:-

நமது மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிவறைகள் அமைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊக்கத் தொகையாக ரூ.12ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கும் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டுக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதோடு, குறைவான எடைகொண்ட குழந்தையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

துர்நாற்றம் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் தொற்று நோய்களும், தோல்நோய்களும் பரவுகின்றன. எனவே இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதிசெய்து திறந்தவெளியை பயன்படுத்தாத நாடாக உருவாக்குவதற்குதான் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது.

மகளிர் சுயஉதவி குழுக்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வி துறை மூலம் அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு தன் சுத்தம், பொது சுத்தம் பற்றி கற்றுக்கொடுத்து, அவர்கள் மூலம் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். மருத்துவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து தனிநபர் இல்ல கழிப்பிடம் கட்டுவதற்கும் கழிவறை பயன்பாட்டினை அதிகப்படுத்தவும் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்த குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, மகளிர் திட்ட அலுவலர் தெய்வேந்திரன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com