ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு நூதன முறையில் மலேசிய பெண்ணிடம் பணம் திருட்டு

மயிலாப்பூரில் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு நூதன முறையில் மலேசிய பெண்ணிடம் பணம் மற்றும் டெபிட் கார்டுகளை திருடிச்சென்ற மர்மமனிதன், பாஸ்போர்ட்டுகளை மட்டும் வைத்து விட்டு சென்று விட்டான். கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு நூதன முறையில் மலேசிய பெண்ணிடம் பணம் திருட்டு
Published on

அடையாறு,

சென்னை திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 52). இவரது பெண் நண்பர் மலேசியாவை சேர்ந்த ருசைசா பின்டி (48). மலேசியாவில் இருந்து சென்னை வந்த இவர், நண்பர் அஜித்குமாருடன் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு காரில் சென்றார்.

அங்கு பொருட்களை வாங்கி விட்டு இருவரும் திரும்பி வந்து கார் கதவை திறந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டு இருந்த மர்மநபர் ஒருவர், கீழே ரூபாய் நோட்டுகள் கிடக்கிறது, அவை உங்களுடையதா? என்று கேட்டுள்ளார். உடனே இருவரும் கீழே கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.

உடனே காருக்குள் இருந்த ருசைசா பின்டியின் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடி விட்டார். திருடன் கைப்பையை எடுத்துக்கொண்டு ஓடியதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர், அதில் மலேசிய பணம் 800, இந்திய பணம் 3 ஆயிரம், 2 டெபிட் கார்டுகள், சர்வதேச ஓட்டுனர் உரிமம் மற்றும் 4 பாஸ்போர்ட்டுகள் இருந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதனமுறையில் பணம் மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே இரு சக்கர வாகனம் மீது ஒரு பர்ஸ் கேட்பாரற்று கிடந்தது. இதனை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 4 மலேசிய பாஸ்போர்ட்டுகள் இருந்தன. அதனை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்தபோது அது ருசைசா பின்டியிடம் திருடப்பட்டவை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பணம், டெபிட் கார்டுகளை மட்டும் திருடிய கொள்ளையன், பாஸ்போர்ட்டுகள் இருந்த பர்சை மட்டும் வைத்து விட்டு சென்றிருக்கலாம் என தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com