அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனை தொடர்ந்து ரூ.28 கோடியில் இணைப்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இணைப்பு பாலத்திற்கு நில ஆர்ஜிதம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் மேம்பால பணிகள் தாமதம் ஆனது.

இதற்கிடையில் நிலத்தின் உரிமையாளர்கள் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் மேம்பால பணிக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய்த்துறை மூலம் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை, முறைப்படி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் நிலத்தின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு அதற்கான ஆவணங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், செயற்பொறியாளர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் உடனடியாக தொடங்கப்படும். 3 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள நடேசன் நகரில் இருந்து அரும்பார்த்தபுரத்தை இணைக்கும் புறவழிச்சாலை பணிக்கு ரூ. 27 கோடியே 95 லட்சம் மதிப்பீடு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடன் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்.

உப்பனாற்றின் மீது பாலம் அமைக்கும் பணி, காமராஜர் மணி மண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். புதுச்சேரியில் பழுதான சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்.

100 அடி ரோட்டில் இந்திராகாந்தி சிலையில் இருந்து ராஜீவ்காந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com