ரெயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 23 பவுன் தங்க நகை திருட்டு தாய்-மகள் கைது

சென்னை சென்டிரல் அருகேயுள்ள மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 23 பவுன் தங்க சங்கிலிகளை திருடிய தாய்-மகள் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 23 பவுன் தங்க நகை திருட்டு தாய்-மகள் கைது
Published on

சென்னை,

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரத்தை சேர்ந்தவர் யசோதா (வயது 60). இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, கடந்த 6-ந்தேதி இரவு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால், சென்டிரல் அருகே உள்ள மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தின் 15-வது நடைமேடையில் அவர் படுத்து உறங்கினார்.

அப்போது 2 பெண்கள் அவர் அருகே படுத்திருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு திடீரென்று கண்விழித்த யசோதா தான் அணிந்திருந்த 23 பவுன் கொண்ட 2 தங்க சங்கிலிகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் படுத்திருந்த 2 பெண்களும் அங்கிருந்து மாயமாகியிருப்பதை தெரிந்துகொண்டார்.

உடனடியாக யசோதா சென்டிரல் ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பி.கே.ரவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் உடனடியாக சென்டிரல் மற்றும் மூர்மார்க்கெட் ரெயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த ரஞ்சனா என்ற பெண்ணை அவரது 16 வயது மகளுடன் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் யசோதாவிடம் நகைகள் திருடியதை ரஞ்சனாவும், அவரது மகளும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 23 பவுன் தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டன.

நகைகள் திருடிய ரஞ்சனா மற்றும் அவரது மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com