காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

மேட்டூர்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16ஆயிரம் கனஅடியானது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது.

இந்தநிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் மணல் திட்டு பகுதியில் இருந்து மெயின் அருவி வரை வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் அழகை பரிசலில் சென்று ரசித்தனர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. சுரங்க மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த தண்ணீர் மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்தோடியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு, அணையையொட்டி உள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து நேற்றும் தொடர்ந்து குறைந்து வந்தது. மதிய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 800 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

இதில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் கால்வாயில் திறந்து விடப்படுகிறது. அதே நேரத்தில் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் அணையையொட்டி உள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 120.18 அடியாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com