ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் - கடலூரில் தொல்.திருமாவளவன்

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் என கடலூரில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் - கடலூரில் தொல்.திருமாவளவன்
Published on

கடலூர்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக தமிழக கவர்னரை விரைவில் சந்தித்து வலியுறுத்துவோம் என கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ரபேல் போர் விமானத்தை ஒப்பந்தம் செய்த விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹெலாத் உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அம்பானிக்கு உதவி செய்யவே பலமுறைகேடு செய்துள்ளது. இதற்கு பிரதமர் தார்மீக பொறுப்பேற்று, தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்தின் அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அதன்மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவது உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக தமிழக கவர்னரை விரைவில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்பட 34 பேரை சனாதன் சன்சாத் என்ற பயங்கரவாத அமைப்பு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சனாதன் சன்சாத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தலை தூக்காத வகையில் அவற்றை தடை செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் வலதுசாரி-சனாதன பயங்கரவாத எதிர்ப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன் வரவேற்றார். தி.மு.க. தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, திராவிடர் கழக செயல் தலைவர் அறிவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் இல.திருமேனி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச் செயலாளர் ஹாஜாகனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, வக்கீல் புருஷோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக காலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் தலைமையில் பயங்கரவாதத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com