ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்தநிலையில் அவருடைய தாயார் ராஜேசுவரி, மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு எனது மகன் கடந்த 28 ஆண்டுகளாக மதுரை சிறையில் உள்ளார். இந்த 28 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே பரோலில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பேரில் தமிழக அமைச்சரவை 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதுவரை, எனது மகன் ரவிச்சந்திரனுக்கு நீண்டகால பரோல் வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், மனுதாரர் முறையான காரணங்களுடன் விண்ணப்பித்தால் 30 நாட்களுக்கு குறைவாக பரோல் வழங்க தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு மாத காலம் பரோல் கோரப்பட்டது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மதுரை சிறை கண்காணிப்பாளர், ரவிச்சந்திரனின் வீடு மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவதால் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது எனக்கூறி நிராகரித்து விட்டார். ஆனால் இதே வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், ராபர்ட் பயாசுக்கு சென்னை ஐகோர்ட்டு ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளது.

ஆகவே, ரவிச்சந்திரனுக்கும் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்ததாக பொங்கல் விழா உள்ளது. ஆகவே ரவிச்சந்திரனுக்கு போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டு, பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ரவிச்சந்திரன் இதுவரை 4 முறை கோர்ட்டு மூலம் பரோல் பெற்றுள்ளார். விடுமுறையில் சென்ற நாட்களில் இருந்து சிறைக்கு திரும்பும் வரை எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தலும் முடிவடைந்துள்ளது. ஆகவே, வருகிற 10-ந் தேதி முதல் 15 நாட்கள் பரோல் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com