கன மழையுடன் புயல் வீசக்கூடும்: கவனமாக இருக்க பொதுமக்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள்

இந்திய வானிலை ஆய்வு மையம், தென்வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புரெவி‘ புயல் இலங்கையில் கரையை கடக்க தொடங்கி, தென் தமிழகத்தில் பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
Published on

இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) , நாளை (வெள்ளிக்கிழமை) அதீத கன மழையும் புயலும் வீசக் கூடும் என்பதால் பொதுமக்கள் மிக மிக அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும்.

பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 209 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான பால், உணவுப் பொருட்கள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடலோர கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், எளிதில் மழைநீர் தேங்க கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பழுதடைந்த வீடுகளில் குடியிருப்போர் மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் வைத்துள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கலாம்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த மையங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கடலோர பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் உள்ள முக்கிய ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்த எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com