திருச்சி சிலை கடத்தல் தடுப்பு போலீசில் தொழில்அதிபர் ரன்வீர்ஷா ஆஜர்

கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ரன்வீர்ஷா நேற்று முன்தினம் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
திருச்சி சிலை கடத்தல் தடுப்பு போலீசில் தொழில்அதிபர் ரன்வீர்ஷா ஆஜர்
Published on

திருச்சி,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ரன்வீர்ஷா (வயது 56). தொழில்அதிபரான இவருடைய வீட்டில் நிலத்தடியில் பதுக்கி வைத்து இருந்த புராதன சின்னங்கள், கலைப்பொருட்கள், உலோகம், கற்சிலைகள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றினர். இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி ரன்வீர்ஷாவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு அவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும், வழக்கு நடைபெறும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி உத்தரவாத ஜாமீன் பெற்று கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ரன்வீர்ஷா நேற்று முன்தினம் ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று காலை ரன்வீர்ஷா திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இதேபோல் வீட்டில் சிலைகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் கிரண்ராவும் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com