ரத்னபிரபா ஓய்வு பெற்றார்: புதிய தலைமை செயலாளராக விஜயபாஸ்கர் நியமனம் கர்நாடக அரசு உத்தரவு

ரத்னபிரபா ஓய்வு பெற்றதை அடுத்து விஜயபாஸ்கரை புதிய தலைமை செயலாளராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
ரத்னபிரபா ஓய்வு பெற்றார்: புதிய தலைமை செயலாளராக விஜயபாஸ்கர் நியமனம் கர்நாடக அரசு உத்தரவு
Published on

பெங்களூரு,


கர்நாடக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தவர் ரத்னபிரபா. அவருடைய பதவி காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. அவருடைய பணி காலத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து முந்தைய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார்.

தனக்கு மேலும் மூன்று மாதங்கள், பணி கால நீட்டிப்பு செய்து கொடுக்குமாறு குமாரசாமியிடம் ரத்னபிரபா கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று ரத்னபிரபாவை தலைமை செயலாளராக மேலும் 3 மாதம் அனுமதிக்க கோரி மத்திய அரசுக்கு குமாரசாமி கடிதம் எழுதினார். இதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

இதற்கிடையே ரத்னபிரபா காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவர் என்றும், அவரது பணி காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்றும் குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் மத்திய அரசுக்கு எழுதிய பணி கால நீட்டிப்பு கடிதத்தை குமாரசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாபஸ் பெற்றார்.

இதையடுத்து கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக விஜயபாஸ்கரை நியமித்து கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டது. அவர் இதுவரை மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயபாஸ்கர் நேற்று மாலையே தலைமை செயலாளராக பதவி ஏற்றார். விஜயபாஸ்கரின் பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் ரத்னபிரபாவுக்கு பிரிவு உபசார விழா விதான சவுதாவில் நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட குமாரசாமி, ரத்னபிரபாவுக்கு சால்வை, மைசூரு தலைப்பாகை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com