

மைசூரு,
மைசூருவில் மாநில உணவு மற்றும் பொதுவினியோகத் துறை மந்திரி யு.டி.காதர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கியதில் எடையளவு குறைவாக இருந்ததாக புகார்கள் வந்தன. இதை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து மக்களுக்கும் சரிசமமாக பொருட்கள் கிடைக்க தற்போதைய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேப் போல் ஆண்டு வருவாய் ரூ.1.20 லட்சத்துக்கு கீழ் உள்ள மக்களுக்கு பி.பி.எல். ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டுகள் கோருபவர்களுக்கு வசதியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுதாரர்கள் மாநிலத்தின் எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகிறார்கள்.
கர்நாடகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் விரைவில் சேவை மையங்களாக மாற்றப்பட உள்ளது. அதன்படி இனி ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி பஸ் பாஸ், ரெயில்வே, பான்கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட சேவைகளை ரேஷன்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு அலை வீசவில்லை.
இதனால் பா.ஜனதாவினர் வன்முறை, மதக்கலவரங்களை தூண்டிவிடுகிறார்கள். இருப்பினும் வன்முறை, மதக்கலவரம் ஏற்படாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.