செங்கோட்டையில் பரபரப்பு: பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
செங்கோட்டையில் பரபரப்பு: பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
Published on

செங்கோட்டை,

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை 6.15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து சேரும். இந்த ரெயில் 2 என்ஜின், 26 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் திருச்சி, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் வழியாக நேற்று காலையில் தென்காசிக்கு வந்தது. இந்த ரெயிலை அழகிரி, செய்யது சுலைமான் ஆகியோர் இயக்கினர். தென்காசியில் ஏராளமான பயணிகள் இறங்கியதால் ரெயிலில் குறைந்த பயணிகளே செங்கோட்டைக்கு பயணம் செய்தனர்.

நேற்று காலை 8.30 மணிக்கு ரெயில் செங்கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில் மெதுவாக சென்று கொண்டு இருந்தது. அப்போது, ரெயில் போக்குவரத்திற்காக தண்டவாள பாதை மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் ரெயிலின் 2-வது என்ஜின் பிரேக் பிடிக்கும் பகுதியில் திடீரென்று உராய்வு ஏற்பட்டு, தீப்பிடித்தது. அதன் அருகில் டீசல் டேங்க் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்த அந்த பகுதியில் நின்ற ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக ரெயில் டிரைவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக ரெயிலை நிறுத்தி கீழே இறங்கி ஓடிவந்தனர். அப்போது, 2-வது என்ஜின் பிரேக் பிடிக்கும் பகுதியில் தீப்பிடித்து, புகை வெளியேறியது தெரியவந்தது. மேலும் ரெயிலில் இருந்த பயணிகள் இந்த சம்பவம் பற்றி அறிந்து, பதற்றம் அடைந்தனர்.

இதையடுத்து ரெயில் டிரைவர்கள், ரெயில்வே ஊழியர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் ஸ்பிரே உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் தீயை அணைத்தனர். பின்னர் ரெயில் டிரைவர்கள் மெதுவாக ரெயிலை இயக்கி செங்கோட்டை ரெயில் நிலையம் கொண்டு வந்து சேர்த்தனர். ரெயில் நின்றதும் அதில் பயணம் செய்த பயணிகள் பதற்றத்துடன் கீழே இறங்கி சென்றனர். டிரைவர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களின் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர் தீப்பிடித்த ரெயில் என்ஜின் பகுதியை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com