நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைத்து சாலை அமைப்பதா? அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சி அருகே சின்ன கொத்தமங்கலத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான அளவில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைத்து சாலை அமைப்பதா? அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
Published on

திருச்சி,

திருச்சி மாநகராட்சி 40-வது வார்டை சேர்ந்தது சின்ன கொத்தமங்கலம். இங்கு மொத்தம் 7 தெருக்கள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதியின்றி இருந்த சின்ன கொத்தமங்கலத்தில் மக்கள் பல முறை கொடுத்த மனுக்களின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைக்கும் பணியை தொடங்கியது. சாலை அமைக்கும் பணியில் பாரபட்சம் நடப்பதாக சின்ன கொத்தமங்கலம் கிராம மக்கள் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

சின்ன கொத்தமங்கலம் ஊருக்குள் செல்லும் பிரதான சாலை 55 அடி அகலத்தில் அமைக்கப்படும் என அதிகாரிகள் ஏற்கனவே வாய்மொழியாக உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் வீடுகள் முன் போடப்பட்டு இருந்த முள்வேலிகள், மதில் சுவர்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அப்புறப் படுத்திக் கொண்டனர். இந்நிலையில்- சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது 20 அடி அகலத்தில் தான் சாலை அமைக்க முடியும் என ஒப்பந்ததாரர் கூறியிருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த ஊர் பொது மக்கள் பணியை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக நேற்று சின்ன கொத்தமங்கலத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கலந்து கொண்டனர். அப்போது ஊர் மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவான 55 அடி அகலத்தில் சாலை அமைக்கப்பட வேண்டும். அளவை குறைக்கக் கூடாது என வாக்குவாதம் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை இதனால் பொதுமக்களும் கலைந்து சென்றனர். அதிகாரிகளும் திரும்பி சென்று விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com