

பலத்த மழை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு நீர்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கம் நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் நாகலாபுரம், சுப்பா நாயுடுகண்டிகை, அச்சம நாயுடு கண்டிகை, காரணி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. கடந்த சில நாட்களாக பிச்சாட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழுவதுமாக நிரம்பியது.
100 கன அடியாக குறைப்பு
அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 25-ந்தேதி காலை நீர்த்தேக்கத்தில் இருந்து மதகுகள் வழியாக ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் மழை பொய்த்து போனதால் நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டது. பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தின் உயரம் 28.1 அடி ஆகும். இதில் 1.853 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 27 அடியாக பதிவானது. 1.650 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு வெறும் 90 கன அடியாக இருந்தது.