சட்டமன்றத்துக்குள் அனுமதிக்க மறுப்பு: நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்துறை மந்திரியிடம் புகார் செய்ய முடிவு

சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை அரசின் செயல்பாடு குறித்து புகார் செய்ய நியமன எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லி செல்கின்றனர்.
சட்டமன்றத்துக்குள் அனுமதிக்க மறுப்பு: நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்துறை மந்திரியிடம் புகார் செய்ய முடிவு
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகியோரை மாநில அரசின் பரிந்துரையின்றி நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என்றும், அவர்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு நகலுடன் கடந்த 26-ந் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போது நியமன எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் உத்தரவின்பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சியினர் கவர்னரிடம் புகார் செய்தனர்.

இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு அடிப்படையில் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்காதது தொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் ஆகியோர் மீது ஐகோர்ட்டில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வருகிற 2-ந்தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இதற்கிடையே தாங்கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாதது குறித்து புகார் செய்ய நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கின்றனர். அங்கு அவர்கள் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து இதுதொடர்பாக புகார் அளிக்க உள்ளனர். சட்டமன்றம் முன்பு நடந்த போராட்டத்தின்போது மயக்கமடைந்த சங்கர் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வருவதால் அவர் டெல்லிக்கு செல்லவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com